May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருட்களின் விலை அதிகரிப்பால் மொத்த வியாபாரம் வீழ்ச்சி!

இலங்கையில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால், பொருட்களின் மொத்த விற்பனை 40 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களில் நாட்டில் சமையல் எரிவாயு, பால் மா மற்றும் கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்தது.

இதன் விளைவாக, மொத்த விற்பனையாளர்களின் தினசரி வருமானம் 15 மில்லியனாக குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சந்தையில் சமையல் எரிவாயு, பால் மா, கோதுமை மா உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் சந்தையில் தட்டுப்பாடாக இருந்த அத்தியாவசிய பொருட்கள், விலை அதிகரிப்பின் பின்னர் சந்தையில் தாராளமாக பெற்றுக்கொள்ள முடிவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு நாட்டில் பொருட்களின் விலை உயர்வானது மக்களின் சமாளிக்க முடியாத அளவிற்கு கடினமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, இன்று கொழும்பு உட்பட பல பகுதிகளில் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அத்தோடு, எதிர்காலத்தில் எரிபொருள் விலையிலும் அதிகரிப்பத தொடர்பில் நிதியமைச்சுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.