July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வயிற்றை பற்றி மட்டுமல்ல நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்”: சாகர காரியவசம்

வயிற்றைப் பற்றி சிந்திக்கும் போது நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும், இல்லையேல் எதிர்காலத்தில் எமது சந்ததியினர் எங்கள் மீது, நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை என்று சாபமிட நேரிடும் என்று அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் சுதந்திரம் கிடைத்தது முதல் 70 ஆண்டுகளாக தங்களின் வயிற்றை நிரப்பிக் கொள்வது தொடர்பாக சிந்தித்தனரே தவிர, நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை என்று அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையால், நாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகள் உயர்வடையும் நிலை உருவாகியுள்ளதாகவும், இந்த நேரத்தில் இவ்வாறு விலை அதிகரிப்பதை தவிர வேறு வழிகள் கிடையாது என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் போது இந்த நாட்டில் மாத்திரம் சட்டங்களை போட்டு அவற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.