July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய மரபுரிமைகளை அடையாளம் காண்பதற்கான நிறுவனக் கட்டமைப்பை நிறுவ அரசாங்கம் தீர்மானம்

இலங்கையின் தேசிய மரபுரிமைகளை முகாமைத்துவப்படுத்துவதற்காக மையப்படுத்தப்பட்ட சுயாதீன நிறுவனக் கட்டமைப்பொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக அடையாளம் காண்பதற்கான குறிகாட்டிகள் அல்லது பொறிமுறைகள் இன்மையால் மேலெழுந்துள்ள பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, இலங்கையின் கலாசார தனித்துவங்களை உறுதிப்படுத்தும் தொட்டுணரக்கூடிய, தொட்டுணர முடியாத தேசிய மரபுரிமைகளை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்து, பொறிமுறையொன்றை தயாரிப்பதற்காக குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், கல்விமான்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுடன், இலங்கையர்களிடமுள்ள தேசிய மரபுரிமைகளை அடையாளம் காணல், ஆவணப்படுத்தல், பிரகடனப்படுத்தல், பாதுகாத்தல், ஒழுங்குபடுத்தல், கையகப்படுத்தல், ஆராய்ச்சிகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை சரியான வகையில் முகாமைத்துவப்படுத்துவதற்காக மையப்படுத்தப்பட்ட சுயாதீன நிறுவனக் கட்டமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் தேவை அதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.