July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதுச் சட்டத்தில் திருத்தம்

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தி, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

அதற்கமைய, தயாரிக்கப்பட்ட அடிப்படைச் சட்டமூலம், பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆடைக் கைத்தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியானதும் சட்டரீதியானதுமான விடயங்கள் பற்றி ஆராயும் குழுவில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களின் பங்கேற்புடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஒய்வு வயதை 60 வரைக்கும் நீடிப்பதற்கும், சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் 52 வயது அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களின் வயதுக்கேற்ப மூன்று பிரிவுகளின் கீழ் உயர்ந்தபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கும் இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்வாங்கி சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.