July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை வழங்குமாறு ஆளும் கட்சியினர் ஜனாதிபதிக்கு கடிதம்

இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆளும் கட்சியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு அவசரமாக இரசாயன உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியினர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் இரசாயன உர பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்து, சேதன உரத்தைப் பயன்படுத்தும் திட்டமொன்றை ஜனாதிபதி அறிமுகப்படுத்தி வைத்தார்.

குறுகிய காலத்தில் சேதன உர திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக விவசாயிகளுக்கு உர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உர பற்றாக்குறைக்கு எதிராக விவசாயிகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வரும் நிலையிலேயே, ஆளும் கட்சியினர் ஜனாதிபதியிடம் இரசாயன உரத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.