July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிரந்தர நியமனம் கோரி வடக்கு சுகாதார பணியாளர்கள் போராட்டம்!

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி சுகாதார பணியாளர்கள் இன்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு  மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இருந்து பேரணியாக புறப்பட்ட சுகாதார பணியாளர்கள், பண்ணையில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ”சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த இடத்திற்கு வரவேண்டும், நீதியை எமக்குத்தர வேண்டும், எமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்து” போன்ற கோசங்களை எழுப்பினர்.

இதன்போது ,வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் தற்போது பொறுப்பான அதிகாரிகள் இல்லை என்றும் அதே நேரம் பிறிதொரு தினத்தில் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருவதாகவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.

மேலும், ‘மாகாண சுகாதார அமைச்சு எந்தவிதமான நியமனங்களையும் தற்போது வழங்கவில்லை என்றும் மத்திய அரசு வழங்கும் நியமனங்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பு கூற முடியாது என்றும் அதற்கு பதில் வழங்க வேண்டியது ஆளுநரே என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த சுகாதாரப் பணியாளர்கள், ‘நாங்கள் நீண்ட காலமாக பணியாற்றி நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் போது எம்மை தவிர்த்து விட்டு கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 62 பேருக்கு நியமனத்தை வழங்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை தொடர்ந்து ஏமாற்று வார்த்தைக்கு இணங்க முடியாது எனவும், உடனடியாக நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த இடத்தில் தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.

This slideshow requires JavaScript.