July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கொவிட் தொற்று குறைந்துவிட்டதாக எண்ண வேண்டாம்” – சன்ன ஜயசுமன

இலங்கையில் கொவிட் தொற்று மற்றும் மரணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதால் கொவிட் தொற்று குறைந்துவிட்டது என தவறாக எண்ண வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் எதிர்காலத்தில் தீவிரமாக பரவல் அடையும் வைரஸாக மாற்றமடையாது என்று யாராலும் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

“குறிப்பாக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு ஒவ்வொரு நாளும் 200 பேர் இறக்கும் நாட்டில், தற்போது உயிரிழப்புகள் குறைவடைந்துள்ளது. எனினும் கொவிட் தொற்று முற்றிலும் போய்விட்டது என்று நினைப்பது மோசமான நிலையை தோற்றுவிக்கும்” என்றார்.

இதேபோல், இந்த வைரஸ் மீண்டும் தீவிரமடையாது என்று எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. உலகில் மீண்டும் ஒரு புதிய அலை உருவாகி வருவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் தடுப்பூசி திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பான அனைத்து விவரங்களும் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று மாநில அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறுகிறார்.

இதற்கிடையில், நாட்டில் 12,360,162 பேர் இதுவரை முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதுடன், ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 14,698,140 எனவும் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.