
இலங்கையில் கடந்த கால மோதல்கள் தொடர்பாக இனப்படுகொலை சார்ந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாத இலங்கையின் ஆட்சேபனை நிலைப்பாடு உட்பட, ஒன்டாரியோ சட்டமன்றத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொது மசோதா குறித்த இலங்கையின் வலுவான கவலையை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன், வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று வெளியுறவு அமைச்சில் சந்தித்த போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் ஒன்டாரியோ மேல் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்டாரியோ சட்டமன்றத்தின் தீர்மானமான இந்த விடயம் அரசியலமைப்பு சார்ந்த கேள்வி என்ற வகையில் நீதித்துறையின் செயற்பாட்டில் உள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகர் பதிலளித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கையின் தடுப்பூசி செயற்றிட்டம் மற்றும் படிப்படியாக நாட்டை மீளத் திறத்தல் தொடர்பான முன்னேற்றம் குறித்து உயர்ஸ்தானிகருக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்று நோயிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் செயன்முறையில் கனடாவின் பங்களிப்பை அமைச்சர் பாராட்டியுள்ளார்.