February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி வழங்கியுள்ள வாய்ப்பை நழுவவிடக்கூடாது”: கே.பி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான, கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி, செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, பிரச்சனைகளுக்கு தீர்வுகாண புலம்பெயர் தமிழர்களுடன் பேசத் தயார் என கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கே.பியிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதன்போது பதிலளித்த அவர், புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தமைக்கு அவரின் தூர நோக்கே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை வரவேற்பது தமிழர்களாகிய தமது பொறுப்பு எனவும், படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.