
இலங்கையில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறும் கோரி, கல்விப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச ஆசிரியர் தினத்தை தேசிய கறுப்பு ஆசிரியர் தினமாக அறிவித்து, ஆசிரியர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைகள் சம்மேளனம் மற்றும் ஒன்றிணைந்த சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாகவும் யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக இரத்து செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றுள்ளது.
அதிபர், ஆசிரியர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.