July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பென்டோரா பேப்பர்ஸ்’: ஜனாதிபதி கோட்டாபய விசாரணைக்கு உத்தரவு!

உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் ஊழல்களை வெளிப்படுத்திய ‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையுடன் தொடர்புடைய தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு கூறியுள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ‘பென்டோரா பேப்பர்ஸ்’ ஆவணம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும், இதன்படி இன்று முற்பகல் ஜனாதிபதி அது தொடர்பில் விசாரணைக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப் பெரும, அதன்போது தெரிவித்துள்ளார்.

பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணத்தில் இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் அவரின் கணவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.