
File Photo
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரெழு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ள நிலையில், அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார்.
அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால், பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்துள்ளனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும் ,தமது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தான் அங்கம் வகிக்கும் கட்சியொன்றின் பெயரை குறிப்பிட்டு, அடிக்கடி தம்முடன் முரண்பட்டு கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.