July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதானி நிறுவனத்துடன் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனைய உடன்படிக்கை கைச்சாத்தானது!

File Photo

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கையில் இந்தியாவின் அதானி நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது.

இன்று முற்பகல் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும் அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டுள்ளனர்.

அத்துடன் மேற்கு முனை அபிவிருத்தியுடன் தொடர்புடைய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உடன்படிக்கைக்கு அமைய கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 34 வீத பங்குகள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் 15 வீத பங்குகள் துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்றன.

‘வெஸ்ட் கன்டெய்னர் இன்டர்நெஷனல் டேர்மினல்’ என்ற பெயரில் மேற்கு முனையத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த போதும், அது தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளை தொடர்ந்து மேற்கு முனையத்தை அந்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்தது.