July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் தாமதப்படுத்தப்பட்டதா?; ஆராயுமாறு அமைச்சர் ஜோன்ஸனிடம் கோரிக்கை

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல ஒப்பந்தங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதா? என்பதை ஆராயுமாறு மேற்படி அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

கடவத்தை முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டம்
மற்றும் மீரிகமவில் இருந்து பொதுஹர வரையான இரண்டாவது கட்டம் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சி அரசின் இறுதிக் காலப்பகுதியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தி நிர்மாணப் பணிகள் மற்றும் அபிவிருத்திகளை மக்கள் நலனுக்காக மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.இந்த விடயம் தொடர்பில் தேவையான தகவல்களை வழங்குமாறும் நல்லாட்சியின் கடைசி காலத்தில் நிறுத்தப்பட்ட நிர்மாணப் பணிகளை மக்கள் நலனுக்காக முன்னெடுப்பதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வீதி அபிவிருத்திஅதிகாரசபை அதிகாரிகளிடம் உறுதியளித்தார்.

குறிப்பாக சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, தேவையான இலக்கை நோக்கி பயணிக்க அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், நெடுஞ்சாலை அபிவிருத்தியின் போது தங்கள் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கு சேவை செய்வது மிகவும் முக்கியமாக கருதி செயற்பட வேண்டும்.

பொது சேவைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.