July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சஹ்ரான் ஹாசிமின் கைத்தொலைபேசிக்கு நடந்ததென்ன?’: விசாரணை கோரும் தயாசிறி ஜயசேகர

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் கைத்தொலைபேசிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை என்று நடத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் பாகங்கள் வெளிநாடொன்றுக்கு எடுத்துத் செல்லப்பட்டதாகவும், அதுதொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அரசியல் ரீதியான பழிவாங்கல்களை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

“தாக்குதலை நடத்தியவரின் தொலைபேசியில் எல்லா விடயங்களும் இருக்கும் நிலையில், தொலைபேசி வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவொன்று குறித்த தொலைபேசியின் பாகங்களை கொண்டு செல்ல இலங்கையின் நீதிமன்றமும் பொலிஸாரும் அனுமதியளிப்பது கேள்விக்குறியாகும்.

அந்த தொலைபேசி பாகங்களைக் கண்டுபிடிப்பதன் ஊடாக தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்கலாம்.

அதன்போதே, இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகளையும் தேடிக்கொள்ளலாம்.

முன்னாள் ஜனாதிபதி அல்லது அமைச்சர்களுக்கு விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. உண்மையான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட வேண்டும்” என்று தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.