July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் ஒரு நாளில் 5,000 மெட்ரிக் டொன் உணவு வீணாகிறது”: அமைச்சர் அமரவீர

File Photo: Facebook/ MahindaAmaraweera

இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டொன்  சமைத்த மற்றும் சமைக்காத  உணவுப் பொருட்கள் வீணாவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உணவு இழப்பு மற்றும் கழிவுக் குறைப்பு குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தையொட்டி சுற்றாடல்  அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, மனித நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகின்றமை தெரியவந்துள்ளதாகவும் ஒரு வருடத்தில் அந்த அளவு 1.3 பில்லியன் டொன் என்று தெரிவிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக மக்களுக்கு போதுமான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், முறையற்ற உணவு முகாமைத்துவம் காரணமாக உலகில் சுமார் 820 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்படுகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உணவு கழிவுகளால் ஏற்படும் உலகளாவிய பொருளாதார கழிவுகளின் பெறுமதி 939 பில்லியன் அமெரிக்க டொடர் என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, 2030 ஆம் ஆண்டுக்குள் உணவு கழிவுகளை 50 வீதத்தால் குறைக்க இலங்கை இலக்கு வைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை தானியக் களஞ்சியமாக கருதப்பட்ட நமது நாட்டில், இன்று அரிசி அரசியல் மயமாக்கப்பட்ட வார்த்தையாக மாறியுள்ளது என்றும் இதற்கெல்லாம் காரணம் பற்றாக்குறையே என்று அவர் கூறினார்.