July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பாறை, பதுளையில் யானை – மனித மோதலுக்கு தீர்வு காண நடவடிக்கை!

அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை – மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பில், மகாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாம் கேட்போர் கூடத்தில் நேற்று, இராஜாங்க அமைச்சர் விமவீர திசாநாயக்க தலைமையில் அதிகாரிகள் மட்டத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய, யானைகளுக்காக அனைத்து மின்சார வேலிகளிலும் சிவில் பாதுகாப்பு படையினரால், இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

மேலும் மின்சார வேலியின் ஒவ்வொரு ஒரு கிலோ மீற்றர் தூரத்திலும் காவல் நிலையங்களை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காவல் நிலையங்களில் ஒன்றுக்கு நான்கு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், எதிர்காலத்தில் இதற்கென 5000 புதிய பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.