July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நீடித்த, நிலையான தீர்வே தமிழர்களுக்கு தேவை”; ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு

தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கும், குடிப்பரம்பலை மாற்றியமைக்கவும் அரசாங்கம் மிக வேகமாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  நீடித்த, நிலையான தீர்வே தமிழ் தரப்பினால் ஆராயப்படும் என்றும் அதுவே தமிழர்களுக்கு தேவையானது எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று (28) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே கூட்டமைப்பும் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (டெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம், இரா சாணக்கியன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக பேசப்பட்டது.

குறிப்பாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கும், குடிப்பரம்பலை மாற்றியமைக்கவும் அரசாங்கங்கள் அனைத்தும் செயற்பட்டாலும், இந்த அரசாங்கம் அதில் மிக வேகமாக செயற்பட்டு வருகிறது என்று தெரிவித்த சம்பந்தன், தொல்லியல் திணைக்களத்தின் மூலம் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தினால் காணிகளை இழந்த மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல், மட்டக்களப்பு மேய்ச்சல் தரவை தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி வாழ்ந்த பண்ணையாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் சம்பந்தன் எடுத்துரைத்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமென நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம்.இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் கேட்கிறது. எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாட்டாக வைத்துக் கொண்டு அதை நீடிக்க அரசு முயல்கிறது என்றும் சம்பந்தன் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

மேலும், அநுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த சம்பவம், நடப்பு சூழலை தெளிவாக பிரதிபலிக்கிறது. தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். பல தசாப்தங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கல் நிர்வாக அதிகாரிகளாக சிங்களவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அனைத்து வழிகளிலும் சிங்களமயமாக்கல் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பான எந்தவொரு பேச்சுக்கும் அரசு தயாராக இல்லை என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையை பெறுவதற்கான தரநிலைகள் பலதை இலங்கை பூர்த்தி செய்யவில்லை.இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதெனில், அந்த தரநிலை முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இலங்கையின் தரநிலை மேம்படாத நிலையில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்கக்கூடாதென ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதை நீங்கள் மிக தீவிரமாக கணக்கிலெடுக்க வேண்டும் என்றும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

இந்த தரநிலைகளை இலங்கை பூர்த்தி செய்யாமல், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கப்பட்டால், அது சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் கூட்டமைப்பினரால் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விவகாரங்களில் குறுகிய கால தீர்வு எதையாவது யோசிக்கலாமா என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை ஏற்கவில்லை. நீடித்த, நிலையான தீர்வே தமிழ் தரப்பினால் ஆராயப்படும், அதுவே தேவையானது எனவும் தெரிவித்தனர்.

இந்த விவகாரங்களில் தமக்கும் வரையறைகள் உள்ளன. நாளை (29) அரசாங்கத்துடன் நடக்கும் மீளாய்வு கூட்டத்தில் இந்த விவகாரங்களை ஆராய்வதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.