July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமிப்பதை தடை செய்யக் கோரி மனு தாக்கல்

வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் சாஹுல் ஹமீத் முஜாஹிரினால் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை இடம்பெறவுள்ள, புதிய தவிசாளருக்கான தெரிவை இடைநிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து தாம் நீக்கப்பட்டமை, சட்டத்திற்கு முரணானது எனவும், அவற்றுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறும், முஜாஹிரினால் ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதில் பிரதிவாதிகளாக வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் உள்ளூராட்சி  ஆணையாளர், செயலாளர் உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

எனவே, மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம் சஹீட், சந்தீப கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாஹுல் ஹமீத் முஜாஹிர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் கடந்த 13 ஆம் திகதி வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.