July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள ‘சுவ தரணி’ மருந்துப் பொதி பிரதமரிடம் கையளிப்பு

கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான ‘சுவ தரணி’ சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியினால் இந்த மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய பயணித்து, ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுவ தரணி’ சுதேச மருந்துப் பொதியானது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துவப் பொருட்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த சுதேச மருந்துப் பொதிகளை முதல் கட்டமாக நாடு முழுவதும் அமைந்துள்ள சகல வழிபாட்டு தலங்களுக்கும், இரண்டாம் கட்டமாக பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக பொதுமக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.