July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரியுங்கள்’: செல்வம் எம்.பி. பிரதமருக்கு கடிதம்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் அனுப்பி வைத்த கடிதத்தில்,

அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது.

இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழை மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு சிகரெட்டின் விலையினை 20 ரூபாவால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயினை இழக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பெரும்பாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகி காணப்படுவதனாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவிற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.

எனவே, இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதேநேரம், அவ்வாறான வரி முறைமையினால் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்கச் செய்வதோடு, பாவனையிலும் சடுதியான வீழ்ச்சியினை ஏற்படுத்த முடியும்.

இன்றைய காலப்பகுதியில் சிகரெட் பாவனையை குறைப்பதானது கொவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையும் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரெட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்கையொன்றினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நான் நம்புகின்றேன் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.