July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெள்ளவத்தை – பாமன்கடை வீதி விரிவாக்கல் பணி இறுதிக் கட்டத்தில்

கொழும்பு – ஹொரண வீதியில் பாமன்கடை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் வீதியின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்தல் மற்றும் பாமன்கடை பாலத்தை அகலப்படுத்தல் என்பவற்றின் மூலமாக தற்பொழுது பாமன்கடை -ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை ஊடாக ஒரு வழியாக பயணம் செய்யும் வாகனங்களுக்கு இருதிசைகளிலும் பயணம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு கொஹுவல மற்றும் பாமன்கடை நகரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இதன் மூலமாக தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

வீதியின் இந்த பகுதிகளையும் விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்தல் மற்றும் பாமன்கடை பாலம் நிர்மாணிப்பு என்பன வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையின் தெற்கு வீதி இணைப்புத் திட்டத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ரூ. 210 மில்லியன் செலவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.