July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உலகில் நிலைபேரான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம்’: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

புவியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஐநா சக்திவலு தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரின் ஓர் அங்கமாக, நியூயோர்க் நகரில் நேற்று சக்திவலு தொடர்பான அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பமானது.

“அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடியதும் நம்பிக்கை மிகுந்ததுமான நிலையான சக்திவலுவைப் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, இந்தப் பூமியின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாநாட்டில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் அழிவுகள் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்களால் பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை நாம் தொடர்ந்தும் புறக்கணிக்கலாகாது.

எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள் இவ்வாறான அச்சுறுத்தல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டுமாயின், முழு உலகமும், சுத்தமான சக்திவலுக்களை நோக்கிச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாகிறது.

மிகச் சிறந்த நிலையான சக்திவலும் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நோக்கிப் பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்”

என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.