July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினார் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் கொவிட் தொற்றினால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் உயிரிழக்கும் விகிதத்தை குறைக்கும் நோக்கில் ‘பைஸர்’ தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக கொழும்பு, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் முதல் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அத்தோடு விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது சிறுவர் வைத்திய நிபுணர்களின் அனுமதியும், முழுமையான மேற்பார்வையும் சுகாதார அமைச்சினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்வாறான சிறுவர்கள் அதிகமாக காணப்படும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இந்த தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டடுள்ளதாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எதிர்காலத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல மேலும் கூறினார்