![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/Sritharan-mp-5.png?fit=720%2C404&ssl=1)
காந்திய வழியில் தன் உயிரை ஆகுதியாக்கிய திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டமை கடும் கண்டனத்திற்குரிய செயலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நியமங்களுக்கும்,பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கும் அமைவாக, விதித்துரைக்கப்பட்ட சிறப்புரிமைகளுக்கு உரித்துடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், தன் இனத்திற்காக உயிர்த் தியாகம் செய்த திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, அதியுச்ச வன்முறைப் பிரயோகங்களோடு கைது செய்யப்பட்டுள்ளமை இந்த அரசின் கோர முகத்தை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது, அவரது சிறப்புரிமைகளை மீறும் வகையில், இந்த ஜனநாயக நாட்டில் இத்தனை மோசமான அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமையானது, இங்குள்ள சாதாரண தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை தெட்டத் தெளிவாக எண்பித்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஒரு குற்றவாளியைப் போல் வலுக்கட்டாயமாக பொலிஸார் கைது செய்தமைக்கு எனது வலுவான கண்டனங்களை பதிவு செய்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.