July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழர்களுடைய உணர்வுகளை மதித்து செயற்பட அரசாங்கம் தயாரில்லை’

நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நா.விற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை, எங்களுக்காக போராடியவர்களை நினைவு கூருவதற்கான உரிமையைக் கூட வழங்க இந்த அரசாங்கம் தயாரில்லை என்பதை என்னுடைய கைதின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

திலீபனின் நினைவிடத்துக்கு சுடரேற்றுவதற்கு நான் தயாராகும் பொழுது அங்கு நின்ற பொலிஸார் என்னை தடுத்தார்கள்.நான் அவர்களிடம் கேட்டேன், நீதிமன்ற தடை உத்தரவு இருக்கின்றதாவென? ஆனால், அவர்கள் நீதிமன்ற தடையுத்தரவை காண்பிக்கவில்லை. நீதிமன்ற தடையுத்தரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்கள் உரிமையை மீறும் உங்களது செயலை ஏற்க முடியாதென நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன்.

நினைவிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக நான் நின்ற இடத்திலேயே சுடரேற்றிய போது அங்கு இருந்த பொலிஸார் மிலேச்சத்தனமாக காட்டுமிராண்டித்தனமாக எங்களுடைய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அதனை தட்டி அணைத்தார்கள். அதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். நினைவுகூரும் உரிமை என்பது எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.

சட்டம், ஒழுங்கை பாதுகாப்போம் என்ற போர்வையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி சிங்கள – பௌத்த மேலாண்மையை நிறுவ செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.எந்த ஒரு இடத்திலும் தமிழர்களுடைய உணர்வுகளை மதித்து செயற்பட அவர்கள் தயாராக இல்லை.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நா.விற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகின்றோம் என கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை, எங்களுக்காக போராடியவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை மறுக்கிறார்கள்.

இப்பொழுது எங்களை கைது செய்து கொண்டு வந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதில் நான் தனியாகத்தான் அங்கு சுடரேற்ற சென்று இருந்தேன். அப்போது அந்த இடத்தில் பொலிஸார் என்னுடன் முரண்பட்டபோது, என்ன நடைபெறுகின்றதென நியாயம் கேட்க முற்பட்ட போது அவர்களையும் சேர்த்து கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வழக்குக்கு தவணையிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.