
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என அதன் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அத்துமீறலும் இன்றி, மக்கள் கூட்டம் இன்றி, கொரோனா பாதுகாப்பு மீறல் இன்றி மக்கள் பிரதிநிதி மேற்கொண்ட நினைவேந்தலை பொலிஸார் கையாண்ட விதம் மிகவும் பாரதூரமானது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்தும் ஒரு சாதாரண மனிதனுக்கு வழங்க வேண்டிய கௌரவத்தையேனும் வழங்காது அவரை இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி குற்றவாளியைக் கொண்டு செல்வது போன்று பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.