July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை’

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த தவறும் இல்லை எனவும் நாட்டை ஐக்கியமாக்கும் மற்றும் அபிவிருத்தி செய்வதில் சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும் என அரச தரப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் உள்ளக பிரச்சினைகளை தீர்க்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த கருத்து தொடர்பில் பல விமர்சன கருத்துக்கள் எழுந்துள்ளன.புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு,புலம்பெயர் தமிழ் புலி அமைப்புகள் வேறு என்பதை முதலில் சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என ஆளுந்தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார சபையில் தெரிவித்தார்,

1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்ட கருப்பு ஜூலை கலவரத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அநியாயங்கள் காரணமாக, வரலாற்றில் அழிக்கவே முடியாத அந்த சம்பவத்தினால் இந்த நாட்டில் வாழ்ந்த கற்ற தமிழ் சமூகத்தினர், பொருளாதார ரீதியில் பலமாக இருந்தவர்கள், வியாபாரிகள் சகலருக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. தமிழ் மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறினர். ஆரம்பத்தில் இந்த நாட்டில் தமிழ் வைத்தியர்கள் அதிகளவில் இருந்தனர், பாகுபாடு இல்லாது அவர்களின் சேவை எம் அனைவருக்கும் கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் முக்கியமான ஒரு தரப்பை இந்த நாட்டை விட்டு விரட்டியடித்தனர். அவர்களே சர்வதேச தளத்தில் புலம்பெயர் அமைப்புகளை உருவாக்கினர்.

அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டுள்ளன. முன்னைய ஆட்சியில் இதே கொள்கை முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஆதரித்தவர்கள் இன்று அதனை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து ஆரோக்கியமான விடயங்களை முன்வைத்துள்ளார். நாம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களை அவர் ஆதரித்துள்ளார். உள்ளக பொறிமுறையில் அவருக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. நாம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தூதரகங்கள், ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் கலந்துரையாடி வருகின்றோம்.பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து தெளிவான நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளோம் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.