July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழு உறுப்பினர் செல்வேந்திரா தெரிவு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக பதவி வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு காலமானதை தொடர்ந்து, அவர் வகித்த பதவி வெற்றிடமாகியிருந்தது.

இதன்படி நகர சபைத் தலைவர் தெரிவுக்கான அமர்வு, இன்று முற்பல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது ஒரு மேலதிக வாக்கினால் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா வெற்றிபெற்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும், சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழு உறுப்பினர் செல்வேந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 உறுப்பினர்களையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.