June 1, 2025 12:47:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை- அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

நியூயோர்க்கில் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்னைச் சந்தித்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையே பரந்த அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் ஐநா பொதுச் சபையின் கூட்டத் தொடருக்குச் சென்றுள்ள போதே, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையே 75 வருட இராஜதந்திர உறவுகள் நிலவுவதாகவும், அதற்கு இரு வெளியுறவு அமைச்சர்களும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

தொழிற்கல்வியில் அவுஸ்திரேலியாவின் அனுபவத்தையும் உதவிகளையும் பெற்றுக்கொள்வதில் இலங்கை மிகுந்த ஆர்வம் காட்டுவதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கடத்தல் எனும் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதில் இலங்கை அரசாங்கம் கணிசமான பங்கைக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியிலும் நல்லிணக்கத்திலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றவற்றின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உள்ளக நிறுவனங்கள் அவற்றின் ஆணைகளை நிறைவேற்றுவதற்கான இடத்தையும் வாய்ப்பையும் அளிப்பது அவசியம். இந்தப் பணியை மீறும் தற்காலிக வெளிப்புறப் பொறிமுறையொன்றை நிறுவுவது தேவையற்றதும், தீங்கு விளைவிக்கவல்லதும் ஆகும்.

ஐநா சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணான வகையில் இலங்கையைத் தேர்ந்தெடுத்து, இலக்கு வைக்கும் ஒரு பொறிமுறையைக் கொண்டிருப்பது முதிர்ச்சியற்றதும், பொருத்தமற்றதுமான செயற்பாடாகும்”

என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மிகவும் அருமையான மற்றும் குறிப்பிடத்தக்க புலம்பெயர்ந்தோர் இருப்பதாக அமைச்சர் பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான அன்பான மற்றும் நட்புறவான உறவை மேம்படுத்துவதற்காக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.