July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பார்கள் திறப்பு – கடைகளுக்கு பூட்டு”: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது!

மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கியதை போன்று மற்றைய வர்த்தக நிலையங்களையும் திறக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

ஐக்கிய சுயதொழிலாளர் வர்த்தக சங்கத்தினால் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார பாதுகாப்பு ஆடைகளை அணிந்தவாறு  சுமார் 20 பேர் வரையில் இணைந்து சமூக இடைவெளியைப் பேணி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, குறித்த இடத்திலிருந்த கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்தனர்.

எனினும் தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறி ஆர்பார்ட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் ஐக்கிய சுயதொழிலாளர் வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.