April 30, 2025 22:05:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் சுகாதார வழிமுறைகளுடன் ஆலயங்களில் வழிபாடுகள்

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலுள்ள ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே பூசை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

தொற்று பரவலை தடுக்கும் முகமாக மாகாண சுகாதார திணைக்களத்தினால் அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக தனித்தனியாக சுற்றறிக்கைகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, பெயர்-முகவரி விபரங்கள் பதியப்பட்ட பின்னரே ஆலயத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆலயத்தின் உள்ளே பக்தர்கள் முகக் கவசம் அணிந்திருத்தல் அவசிமாகும் என்பதுடன் சமூக இடைவெளியையும் பேண வேண்டும்.

மேலும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல முடியும்.

நல்லூர் ஆலயத்தில் பின்பற்றப்படும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை போன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய ஆலயங்களும் பின்பற்றி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.