May 31, 2025 14:14:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்கா பயணமானார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இம்முறை கூட்டத்தொடர், “கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைபேரானதன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளிலேயே இடம்பெறவுள்ளது.

ஐநா பொதுச் சபைக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரையாற்றவுள்ளார்.

கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன் ஜனாதிபதி இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும், ஜனாதிபதியுடன் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.