July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குண்டுத் தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என்று உறுதியாக குறிப்பிடவில்லை; பொதுபல சேனா

தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை போன்ற பிறிதொரு அடிப்படைவாத தாக்குதல் இடம் பெறலாம்.ஆகவே பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டாரே தவிர, குண்டுத் தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என்று உறுதியாக குறிப்பிடவில்லை என பொதுபல சேனா அமைப்பின் ஊடக பிரிவு குறிப்பிட்டது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை போன்று மற்றுமொரு குண்டுத் தாக்குதல் இடம்பெற போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஒருபோதும் குறிப்பிடவில்லை.குறிப்பிடாத விடயம் ஊடகங்களினால் திரிபுபடுத்தப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஞானசார தேரர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதை அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுதாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பல இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டதை பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறான நிலை எதிர்காலத்தில் தோற்றம் பெற கூடாது என்றே அவர் குறிப்பிட்டாரே தவிர, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை போன்று மற்றுமொரு தாக்குதல் இடம்பெற போவதாக அவர் குறிப்பிடவில்லை.என பொதுபல சேனா அமைப்பின் ஊடக பிரிவு குறிப்பிட்டது.