July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான மனு அடுத்த வாரம் விசாரணைக்கு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு முதல்கட்ட விசாரணைக்காக அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றுவதை தடுத்து ஆணையீட்டு எழுத்தாணையை பிறப்பிக்குமாறு கோரி மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மனுவின் பிரதிவாதிகளாக அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, நிதியமைச்சர் பசில்  ராஜபக்‌ஷ, மத்திய வங்கியின் துணை ஆளுநர், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அஜித் நிவாட் கப்ரால் ஏற்கனவே மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கிக்கு 10.4 பில்லியன் ரூபா தொடக்கம் 10.6 பில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறிகள் மோசடி தொடர்பிலான கணக்காய்வின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதால், அவரை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் அதனூடாக நீதிமன்றத்தை கோரியுள்ளார்.