
யாழ். மாநகர சபையால் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கொட்டப்படும் கழிவுகளை மீளவும் அகற்றுமாறு வேலணை பிரதேச சபை குறித்த தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம், இந்த செயற்பாட்டிற்கு தமது எதிர்ப்புகளையும் கடும் கண்டனங்களையும் வேலணை பிரதேச சபை வெளியிட்டுள்ளது.
யாழ். மாநகர சபையினரால் புல்லுக் குளம் தூர்வாரப்பட்டு வருகின்றது.
குறித்த குளத்தில் காணப்பட்ட சேற்றுடன் கூடிய துர்நாற்றம் மிக்க சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையிலான கழிவுகளை வேலணை பிரதேச சபையின் அனுமதியின்றி அதன் ஆளுகைக்கு உட்பட்ட மண்கும்பான் மையப்பகுதிக்குள் டிப்பர் வாகனங்களில் கொண்டுவந்து கொட்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் யாழ். மாநகர சபையின் குறித்த அனுமதியற்றதும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கைக்கு குறித்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அது தொடர்பில் வேலணை பிரசே சபைக்கும் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு வேலணை பிரதேச சபையின் அதிகாரிகள் இன்றையதினம் சென்றிருந்ததுடன் கழிவுகளை கொட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட இரண்டு டிப்பர் வாகனங்களையும் வழிமறித்தது திருப்பி அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே குறித்த பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீளவும் அகற்றுமாறு குறித்த குளத்தை தூர்வாரும் தரப்பினருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளதுடன், யாழ் மாநகர சபையின் இத்தகைய அத்துமீறிய அனுமதியற்ற ஏனைய பகுதியின் சுற்றுச் சூழலை பாதிக்கின்ற நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை யாழ். மாநகர சபையின் கழிவுகளை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கள் ஏற்கனவே கொட்டப்பட்டு வருவதால் கல்லுண்டாய் பகுதியின் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் குறித்த யாழ் மாநகரசபை மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கிடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
தற்போது யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த குளத்தின் கழிவுகள் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்கள் அதன் சுற்றுச் சூழைல பாதிக்கும் வகையில் அனுமதியின்றி கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.