June 2, 2025 10:44:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”விமான நிலையத்திற்கு வந்த தாக்குதல் எச்சரிக்கை மின்னஞ்சல் போலியானது”: பாதுகாப்பு செயலாளர்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற, தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள சகல பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர், தற்போதுள்ள அமைதியை சீர்குலைக்க எவருக்கும் வழிவகுக்காமல் தத்தமது கடமைகளை திறம்பட முன்னெடுத்து வருகின்றனர் என்று அறிக்கையொன்றை வெளியிட்டு பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தனிப்பட்ட நலனை எதிர்பார்த்து கைக்குண்டொன்றை வைத்த இரண்டு சந்தேக நபர்கள் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.