July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழ் கைதிகள் கோரிக்கை- கஜேந்திரகுமார் தெரிவிப்பு

அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் கைதிகள் தமது பிரதேசங்களுக்கு அருகில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றி தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வியாழக்கிழமை(16) சந்தித்து கலந்துரையாடினர்.

தமிழ் கைதிகளை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,இதனையடுத்து,சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு பேசி, சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் உள்ளே செல்ல அனுமதியளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும், தமிழ் கைதிகள் அனைவரையும் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் இரண்டு கைதிகளை மாத்திரமே சந்திக்க முடிந்ததாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

மேலும், சிறையில் உள்ள தமிழ் கைதிகள் தமது பிரதேசங்களுக்கு அருகில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றி தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.

அவர்களின் கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளதாகவும் அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.