![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/Bandaranaike-International-Airport.jpg?fit=800%2C539&ssl=1)
முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்கள் பிசிஆர் பரிசோதனைக்காக ஹோட்டலில் தங்கவேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வருகை தரும் இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு கொவிட் தொற்று இல்லையென்றால், அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நடைமுறையானது அடுத்த வாரம் அமுலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சார் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரையில் அவர்கள் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படும் நடைமுறையே தற்போது உள்ளது.
இவ்வாறு தங்க வைக்கப்படும் ஹோட்டல்களில் அதிக கட்டணம் அறவிடும் மோசடியான செயற்பாடு தொடர்பில் செய்திகள் வெளியாகி இருந்தன.
குறித்த தனிமைப்படுத்தல் ஹோட்டல்களில் இடம்பெறும் இவ்வாறான மோசடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
அதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு சில மணித்தியாலங்களுக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.