July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சரை கைது செய்க”: கூட்டமைப்பு வலியுறுத்தல்!

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத் துப்பாக்கியுடன் புகுந்த சிறைச்சாலைகள் நிர்வாகம் மற்றும்  கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர், அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரை  அச்சுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரை பதவி நீக்கி, கைது செய்ய வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், சிறைச்சாலைக்குள் சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர், அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அராஜகமான இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விசாரணையின் பின்னர் அவரை கைதுசெய்ய வேண்டும் என்பதுடன், அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது டுவிட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, “இந்தச் சம்பவம் மிகவும் அராஜகமானது. எனவே, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று இராஜாங்க அமைச்சர் உடனடியாகப் பதவி துறக்க வேண்டும்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.