February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகளிடம் இருந்து நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

ஒரு கிலோகிராம் நாடு அரிசி நெல்லை 55 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே  தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக இவ்வாறு நாடு நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை(14) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஏற்கனவே  50 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்த நிலையில், தற்போது  5 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல், நிர்ணய விலையின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுராதபுரம் மாவட்டத்தின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி பெரேரா கூறியுள்ளார்.

அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட இடைத்தரகர்கள் அதிக விலையில் நெல்லை கொள்வனவு செய்ய முயற்சிப்பதாகவும், இந்த மோசடி வியாபாரத்தை தடுக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.