July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இணுவிலைச் சேர்ந்த பெண் கொரோனாவுக்கு பலி

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயொருவர் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண் இவ்வாறு யாழ்.போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் இருவரும் யாழ்.போதனா மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

“கடந்த 4 ஆம் திகதி கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அன்றைய தினமே அவருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,குறித்த பெண்ணுக்கு புதன்கிழமை (08)ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.அதன் பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையை யாழ்.போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். சடலம் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.