October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சம்பந்தன் ஐ.நா.வுக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளடக்கப்பட்டவையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐ.நா.வுக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், தாம் ஏற்றுக்கொண்டவை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பற்றியோ அல்லது நில ஆக்கிரமிப்புக்கள் பற்றியோ இன்று எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. தமிழர்கள் அடக்கி ஆளப்படுகின்ற ஒரு நிலையே இங்கு காணப்படுகின்றது. ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பினூடாக அனுப்பப்பட்ட கடிதத்தில் நாங்கள் எந்த கையொப்பமும் இடவில்லை என தெரிவித்துள்ளார்.

“அதேபோல, ஞாயிற்றுக்கிழமை இணைய வழியிலான ஒரு கலந்துரையாடலின் போது, சம்பந்தன் ஐயா குறித்த கடிதத்தை ஒரு தனி மனிதனாக அனுப்பிவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அதனை அனுப்பியிருந்தால், நாங்கள் எதனையும் செய்ய முடியாது. காரணம், அவர் சிங்கக் கொடியை பிடித்து விட்டு காளியின் கொடி என்று சொல்லுவார். மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால், கடிதத்தை அனுப்பி விட்டு இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்றால், எல்லோரும் ஏற்றுக்கொண்டதாக கருத முடியாது. அவர் ஐ.நா.வுக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டவை அல்ல. நாங்கள் இது தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி இருக்கின்றோம். ஆனால், கடந்த 19 ஆம் திகதி அனுப்ப வேண்டிய கடிதத்தை நாங்கள் அனுப்பத் தவறி இருக்கிறோம். இது எங்களிடம் இருக்கின்ற பெரும் தவறு”

என்று சிறிதரன் தெரிவித்துள்ளார்.