July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கூட்டமைப்பை உடைத்து தமிழரசுக் கட்சி தனியாக செயற்படவில்லை”: சுமந்திரன்

”ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதனுடைய தலைவர் சம்பந்தனின் கையொப்பத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்டது” என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் இன்று வவுனியாவிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது வவுனியாவில் பொதுமக்களின் காணிகள் வனவள திணைக்களத்தினரால எல்லைப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சுமந்திரன்,

வவுனியா மாவட்டத்திலுள்ள இத்திகுளம் பிரதேசத்திலே நீண்ட காலமாக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதனை ஒரு எல்லைப் பிரச்சினையாக மாற்ற முயற்சிப்பதாக தெரிகின்றது. வவுனியா எல்லைக்குள் இருந்ததை வவுனியா தெற்கு பிரிவுக்குள் இருப்பதாக காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்‌. இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் பிரதேச செயலாளரோடு பேசியிருக்கின்றோம் ‌என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறான விடயம் இனியும் தொடர்ந்து நடைபெறுமாக இருந்தால் நாங்கள் மேலிடத்தில் தெரியப்படுத்தவும் இது தொடர்பாக குரல் எழுப்புவதற்கும் முடிவெடுத்திருக்கின்றோம். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஜெனீவாவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் குறித்து கருத்த வெளியிட்ட சுமந்திரன், ஜெனீவாவுக்கு தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதத்தையும் அனுப்பவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கையொப்பத்தில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சியே, அந்த கூட்டமைப்பாக தான் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். ஏனைய கட்சிகள் வேறாக செயற்பட்டு வருவது தொடர்பாக நாங்கள் அவர்களோடு பேசலாம். ஆனால் தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் கூட்டமைப்பை உடைத்து தனியாக செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.