July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இத்துடன் தமிழரசுக் கட்சியின் கதை முடிந்துவிடும் என்கிறார் ஆனந்த சங்கரி

சம்பந்தனுக்கும், செல்வம் அடைக்கலநாதனுக்கும் ஜெனிவா விடயத்தை கையாள்வதற்கான எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘தற்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசு கட்சி தனித்து பயணிக்கக்கூடியதான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாதக-பாதக நிலை’ தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வீ.ஆனந்தசங்கரி,

‘இதில் ஒரு நன்மை இருக்கின்றது.இதனுடன் தமிழரசு கட்சியின் கதை முடியும். ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் 18பேர் நாடாளுமன்றில் இருந்தனர். தனது சுயநலனிற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்தது மாவை சேனாதிராஜா. இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அவரை இரண்டு தடவை தேசியல் பட்டியல் ஊடாக நானே நியமித்திருந்தேன்.

நீண்ட காலத்தின் பின்னர் யாழ். மாநகர சபை தேர்தலிற்கு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்த சேனாதிராஜா, தேர்தல் கேட்பதெனில் கேட்கலாம் என கொழும்பிலிருந்து தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது அவர் தான் கேட்க முடியாது என தெரிவித்திருந்தார்.

திருமதி யோகேஸ்வரன் கேட்பதற்கு தயாராக உள்ளார். நீங்கள் கேட்காது விட சம்மதமா என அவரிடம் கேட்டபொழுது, சம்மதம் தெரிவித்தார். குறித்த தேர்தலிற்கான நோட்டீசுகளை அச்சடிப்பதற்கு சிவபாலன் சென்றபொழுது அவருடன் சென்ற சேனாதிராஜா குறித்த பிரதியில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர் என்ற பதத்தை நீக்குமாறு கூறியிருந்தார்.

ஆரம்பத்திலேயே விசப்பாம்பு போலவே அவர் எம்முடன் பழகியுள்ளார். ஆயினும் ஆனந்த சங்கரிதானே தலைவர் எனவும் அது அவ்வாறே இருக்கட்டும் எனவும் தெரிவித்து அச்சு பிரசுரத்துக்காக கையளித்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் மறுநாள் நோட்டிஸ் கிடைக்கும் பொழுது அது நீக்கப்பட்டே இருந்தது.அதன் பின்னர் முகுந்தன் அதில் தலைவர் என்ற பதத்தினை கையினால் எழுதியிருந்தார். அவ்வாறானவர்தான் சேனாதிராஜா.

சிவசிதம்பரத்தின் மறைவுக்கு பின்னர் தலைவர் பதவிக்கான தேர்வு இடம்பெற்ற பொழுது அந்த தேர்வில் நானே தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் குறித்த கூட்டத்திற்கு சேனாதிராஜா மாத்திரமே சமுகமளித்திருக்கவில்லை. அவர் தலைமை பதவிக்காகவே அன்றிலிருந்து இன்றுவரை அவர் செயற்படுகின்றார். அமிர்தலிங்கம் செத்தால் என்ன, ஆனந்தசங்கரி செத்தால் என்ன. அவருக்கு வேண்டியது தலைமை.

இன்று இருக்கின்ற பிரச்சினை என்னவெனில், பெரிய துரோகம் செய்தவர்கள் எல்லோரும் ஒன்றாக வந்தார்கள். இன்று அவர்கள் பிரிந்து உள்ளனர். செல்வம் அடைக்கலநாதன் யார்?, தர்மலிங்கத்தின் மரணத்திற்கு காரணம் செல்வம் அடைக்கலநாதன். ஆனால் தர்மலிங்கத்தின் மகனும், செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திடுகின்றனர் பதவிக்காக.

இந்த நாட்டில் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட அழிவுகளிற்கு முக்கிய காரணம், இந்த நிலை இவ்வாறு தொடர்வதற்கு முக்கிய காரணம் இருவரேயாகும். எங்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி எனது நீண்டகால அனுபவத்தின்படி இந்திய முறைமையை ஒத்ததேயாகும். அதற்கு இன்று ஜனாதிபதி உள்ளிட்ட பலருடனும் பேசியிருக்கின்றேன்.

கடந்த காலத்தில் கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை இவர்கள் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. இறுதியில் 3 லட்சம் மக்கள் இறந்ததுதான் மிச்சமானது. அந்த 3 லட்சம் மக்கள் இறந்தமைக்கு காரணமானவர்கள் இவர்கள்.

இன்று ஜெனிவா தொடர்பில் பேசுகின்றனர்.முதல் முதலில் ஜெனிவா தொடர்பில் பேசும்பொழுது, அங்கு சென்று என்னத்தை பேசுவது என்றார்கள். நாங்கள் போக வேண்டுமா எனவும் போகாவிட்டால் நாங்கள் துரோகிகளா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்தனர்.

ஜெனிவா போகாவிட்டால் நாங்கள் துரோகிகளா என சிறிதரன் சொல்லியிருந்தார். அயல் நாடுகள் அங்கு போகவேண்டாம் என கூறியதாக சேனாதிராஜா கூறியிருந்தார்.

சம்பந்தனுக்கும்,செல்வம் அடைக்கலநாதனுக்கும் ஜெனிவா விடயத்தை கையாள்வதற்கான எந்த உரிமையும் கிடையாது. அது மாத்திரமல்ல கடமையும் கிடையாது. ஏனெனில் அவர்கள் இதுவரை காலமும் செய்து வந்தது அவ்வாறான வேலையாகும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.