July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவா விவகாரத்தைப் பயன்படுத்தி கூட்டமைப்பை பிளவுபடுத்த முடியாது’: இரா. சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பும் விவகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது என்று இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பத் தயாரித்த அறிக்கையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த டெலோவும், புளொட்டும் கையெழுத்திட்டுள்ள விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த சம்பவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, டெலோ மற்றும் புளொட் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பத் தயாரித்த அறிக்கையில், கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய இரு பங்காளிக் கட்சிகளும் கையெழுத்திட்டமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவும் இல்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் என்னால் கருத்துத் தெரிவிக்கவும் முடியாது”

என்று இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.