July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசேட பாராளுமன்ற அமர்வில் அவசரகால சட்டம் தொடர்பில் முழுநாள் விவாதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் கடந்த 30 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகாலச் சட்ட விதிமுறைகள் தொடர்பில் விவாதிக்க விசேட பாராளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (06) கூடுகின்றது.

நாட்டில் தீவிரமடைந்துவரும் கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆராயும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது திங்கட்கிழமையும் (06) செவ்வாய்க்கிழமையும் (07) பாராளுமன்ற அமர்வுகளை நடத்த இணக்கம் காணப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையிலும்,ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், இந்த அமர்வுகளின் போது இதற்கு முன்னர் பல்வேறு காரணங்களுக்காக விடுபட்ட ஆளும்-எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளை எடுத்துக் கொள்வதற்கும் முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அவசரகாலச் சட்டத்தை முழுநாள் விவாதமாக முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக,பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 02 வது பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பிறப்பிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால சட்ட ஒழுங்கு விதி மீதான முழுநாள் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை செவ்வாய்க்கிழமை (07) முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை,இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

மேலும்,பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன்,4.50 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.