July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பராக்கிரம சமுத்திர உடற்பயிற்சி நடைபாதை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டுக்கு அருகில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவிருந்த உடற்பயிற்சி நடைபாதையின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகா சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே குறித்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நிஹால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டுக்கு அருகில் நடைபாதை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட கற்களை அங்கிருந்து அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு உடற்பயிற்சி நடைபாதையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, அந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி மகா சங்கத்தினர் பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகில் கடந்த 27ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை விவசாயக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குழுவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு நீர்ப்பாசன பொறியாளர், பொலன்னறுவை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ஆகியோரும் வருகை தந்தனர்.

இதில் மகா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளின்படி கட்டுமானத்தை நிறுத்துவதாகவும், கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அகன்று சென்றனர்.

இதனிடையே, பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள உடற்பயிற்சி நடைபாதையின் கட்டுமானம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத் தெரிவித்துள்ளார்.