October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எஸ்.எஸ்.சிதம்பரநாதன்; அளவெட்டி மண் தந்த ஒப்பற்ற நாதஸ்வர கலைஞன்

யாழ்ப்பாணம்,அளவெட்டி மண்  தந்த ஒப்பற்ற நாதஸ்வர வித்துவான் அளவையூர் எஸ்.எஸ். சிதம்பரநாதனின் (வயது 77) மறைவு,ஈழத்து நாதஸ்வர கலைக்கு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன் தவிற்காரர் செல்லத்துரை அவர்களின் மகனான இவர்,தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப் பருவத்திலேயே ஆரம்பித்தவர். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர்.தந்தையாருடன் இணைந்து கலைத் தொண்டு பேணிய இவர்,நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார்.அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார்.

அதன் பின்னர் இந்தியாவுக்கு சென்று பிரபல வித்துவான்களிடம் நாதஸ்வரப் பயிற்சி பெற்ற இவர்,தமது மாமனார் தவிற் கலைஞர் கணேசரத்தினத்தின் வழிகாட்டலில் வெளியூர்க் கலைஞர்களிடமும் இசைப் பயிற்சி பெற்றார்.

இவருடைய விடாமுயற்சியும் கடின உழைப்பின் காரணமாகவும் ‘நாதஸ்வர இளந்தென்றல்’ என்ற பட்டத்தை தமது இளமைக் காலத்திலேயே பெற்றார்.வயது வந்து பெருங் கலைஞராக மாறியபோது, இவருக்கு ‘நாதஸ்வரகானவாருதி’ என்ற பட்டம் கிடைத்தது.

இவர் தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் பிரபல இசை மேதையாகக் கணிக்கப்பட்டார்.இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் கலைஞர்களுக்கான கலாபூஷணம் விருதினையும் சிதம்பரநாதன் பெற்றுக் கொண்டார்.

கொழும்பை மையமாகக் கொண்டு புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் நாதஸ்வர இசை பரப்பி வந்த சிதம்பரநாதன், அளவெட்டி மண் தந்த ஒப்பற்ற நாதஸ்வர கலைஞர் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

இவரது மகன் இளவல் ஜலதரன் வயலின் வாத்தியக் கருவியை இந்திய இசைக் கல்லூரிகளில் கற்று இன்று பலராலும் பாராட்டப்படும் இசை நிகழ்வுகளை நடத்தி வருகின்றமையும் எம்மண்ணுக்குப் பெருமை சேர்க்கின்றது.

எஸ்.எஸ். சிதம்பரநாதன் மறைந்தாலும் அவருடைய இசைப் புலமை தமிழ் கூரும் நல்லுலகம் எங்கும் ஒளி வீசிப் பிரகாசிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.