
ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து, சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ராஜபுர வைத்தியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளதுடன், கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டுள்ளார்;.
தொற்றா நோய்கள் பலவற்றிற்கு சுதேச வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கும் மொனராகலை ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலை, நாற்பது நோயாளர்கள் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ளது.
இவ்வைத்தியசாலையில் வெளிநோயளர் பிரிவு மற்றும் தங்கி சிகிச்சை பெறும் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட மத குருமார்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னோர்கள் பாதுகாத்த சுதேச சிகிச்சை முறைகளை அவ்வாறே எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாத்து கையளிப்பதும் சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்துவதும் காலத்தின் தேவையாகும் என பிரதமர் மகிந்த தெரிவித்துள்ளார்.